Tuesday, December 16, 2003

தண்ணீரின் தாகம் !

*

நான் ஒரு சிரஞ்சீவி !

காலச்சக்கரத்தால் அழிக்கப்படா

சிற்சில பேர்களிலே

நான் முதல்வன்.


நானே பெரும்பகுதி !

இவ்வுலகில் மட்டுமல்ல,

உங்கள் உடலிலும்தான்.


நான் சமத்துவத்திற்கோர் முன்னுதாரணம் !

கர்ப்பக்கிரகக் கடவுளையும்,

காரிருள் நெஞ்சம் கொண்ட கடையோனையும்

சமமாகப் பாவித்து நீராட்டுவதால்.


நான் தவிர்க்கமுடியாதவன் !

மண்ணை,பொன்னை,பெண்ணை வெறுத்தோரும்

என்னை வேண்டாமென்று சொல்லமுடியாததால்.





நான் பொதுநலவாதி !

பிறரை சுத்தமாக்கி

நான் அழுக்காவதால்.


நான் இவ்வுலகத் தேரின் அச்சாணி !

அதுமட்டுமல்ல,

அத்தேரின் சக்கரங்களும் நானேதான்.


என்னைப் பாராட்டும் மக்களே !

ஒரு சிறு விண்ணப்பம் ...

கேவலமான, மக்களைக் கெடுக்கும் மதுவுக்கு

என் பெயரைச் சூட்டாதீர் !!!!

*

0 Comments:

Post a Comment

<< Home